கிங்டம் - Kingdom - கொரியன் தொடர் - Korean Serial - 2019 - Season 1
இது கொரியன் Joseon era வில் நடக்கும் ஜாம்பி தொடர். அரசர்கள் ஆட்சி செய்யும் கால கட்டத்தில் ஜாம்பிகளை பார்ப்பது புதுமையாக இருந்தது.
இந்த தொடரின் முக்கியமான அம்சம் அதன் கதைக்களம். வெறுமையாக ஜாம்பிகளை மற்றும் காண்பித்தாலும் போரடிக்கும். ஆனால் பதவி மற்றும் அதிகாரத்திற்கு செய்யும் சூழ்ச்சியுடன் ஜாம்பி கதை களத்தையும் இணைத்து கொடுத்ததன் காரணமாக இந்த தொடர் தனித்து நிற்கிறது.
இது கொஞ்சம் சிறிய தொடர் , மொத்தம் 2 சீசன்கள் , ஒவ்வொரு சீசனிலும் 6 எபிசோட்கள்.
நாட்டின் அரசர் ஒரு வித நோயினால் பாதிக்கப்பட்டு ஜாம்பியாக மாறி விடுகிறார். ஆனால் முதன்மை அமைச்சர் பதவி மற்றும் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு அது அம்மை நோய் என்று சொல்லி மறைத்து வைக்கிறார்.
அரசரின் இளம் மனைவி கர்ப்பமாக உள்ளார். வயதான காலத்தில் அரசரை திருமணம் செய்த இவர் முதன் மந்திரியின் மகளும் கூட.
பட்டத்து இளவரசர்க்கு கூட தந்தையைப் பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் இளவரசர் முறையான மனைவிக்கு பிறந்தவர் இல்லை.
தற்போது அரசர் இறந்த விஷயம் வெளியே வந்தால் பட்டத்து இளவரசர் ஆட்சிக்கு வந்து விடுவார் மற்றும் தனக்கு பிறக்கும் குழந்தைக்கு மதிப்பு இருக்காது மற்றும் அதிகாரம் இளவரசர் கையில் சென்று விடும் என்பதால் அப்பா மகள் இணைத்து சதி திட்டம் தீட்டுகின்றனர்.
ஒரு தருணத்தில் பட்டத்து இளவரசர் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இதனால் தலைநகரை விட்டு தனது தனி பாதுகாவலன் துணையுடன் வெளியேறி தந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை அணுகி உண்மையை தெரிந்து கொள்ள கிளம்புகிறார்.
இந்நிலையில் மருத்துவரின் உதவியாளர் ஜாம்பி அரசரால் கடித்து கொல்லப்படுகிறார். அவரது இறந்த உடலில் இருந்து கிராமத்தில் உள்ள மருத்துவ மனை முழுவதும் ஜாம்பியாக மாறி விடுகின்றனர்.
இந்த தொடரில் வரும் ஜாம்பிகள் வித்தியாசமானது. இவை பகலில் சூரிய ஒளியை வெறுத்து மறைவான இடத்தில் இறந்தது போல கிடக்கின்றன. ஆனால் இரவில் மாமிசத்திற்காக அலைகின்றன. Walking dead serial - வில் வரும் மெதுவான ஜாம்பிகள் போல் அல்லாமல் மின்னல் வேகத்தில் நகர்கின்றன. மனிதர்களை கடித்தால் சில நிமிடங்களில் அவர்களும் ஜாம்பியாக மாறி விடுகின்றனர். இதனால் குறைந்த நேரத்தில் பல ஆயிரக்கணக்கான அளவில் பெருகுகின்றன.
பட்டத்து இளவரசர் எவ்வாறு ஜாம்பிகளை சமாளித்து மக்களை காப்பாற்றி , அமைச்சர் மற்றும் ராணியின் சதியை முறியடித்தார் என்பதை தொடரில் பாருங்கள்.
பாதி சீசனுக்கு மேல் கதாபாத்திரங்கள் மற்றும் கதை புரிந்து கொள்வதற்கு ஆகிறது. அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் மற்றும் அமைச்சர்கள் அவர்களின் அதிகாரங்கள் விளக்கமாக சொல்லப்படுகிறது. பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையே ஆன இடைவெளி மற்றும் ஏற்ற தாழ்வுகள் காண்பிக்க படுகிறது.
ஜாம்பிகள் என்ட்ரி கொடுத்த பின்பு டாஃப் கியரில் போகிறது.
இளவரசன் மற்றும் அவரது படையினர் பொது மக்களை பெரிய ஜாம்பிக்கள் குழுவிடம் இருந்து காப்பாற்றுவது பரபரப்பின் உச்சம்.
ஆனால் அடுத்த காட்சியில் கஷ்டப்பட்டு காப்பாற்றிய மக்கள் அமைச்சரின் படைகளால் கொல்லப்படுவது ஜாம்பிக்களை விட மோசமானவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் என்பதை காட்டுகிறது.
நடிப்பு, ஒளிப்பதிவு, படம் பிடித்த லொக்கேஷன்கள், உடைகள், கதாபாத்திரங்கள் மற்றும் ஜாம்பிகளின் ஒப்பனை என அனைத்தும் சிறப்பாக உள்ளது.
ஒரு ஊரை காப்பாற்ற இரவில் ஜாம்பிகளின் தாக்குதல்களை எதிர்பார்த்து வராமல் காலையில் நிம்மதி பெருமூச்சு விடும் வேளையில் ஜாம்பி படை வர ஆரம்பிக்கிறது. இரவில் மட்டுமே வரும் ஜாம்பிகள் எவ்வாறு பகலில் வருகின்றன என இளவரசன் உட்பட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து பார்க்கும் போது முதல் சீசன் நிறைவடைகிறது.
கண்டிப்பாக பாருங்கள்.
Director: Seong-hun Kim
Writer: Kim Eun-hee
Cast: Doona Bae, Greg Chun, Seung-ryong Ryu, Jun-ho Heo, Jason Her, Crystal Lee, Ji-Hoon Ju
கருத்துகள்
கருத்துரையிடுக